பிரபஞ்சத்தை ஆளும் ஒழுக்கம் .
ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும், நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் கண்ணுக்கு தெரியாத நியதியைத் தேடிக் காணத் தொடங்கிற பொழுதுதான் மனிதன் மனிதத் தன்மையை அடைகிறான். அவன் அந்த நியதிக்குத் தக்கபடி தனது மனத்தைத் திருத்திக் கொள்ளும்போது, தனது நிலைமைக்கு மற்றவர் காரணமென்று குற்றம் சாட்டலைவிட்டு உறுதியும். மேன்மையுமுள்ள நினைப்புகளைக் கொண்டு தன்னை வளர்க்கிறான். தனது நிலைமைகளோடு போராடுதலை விட்டுத் தனது நிலைமைகளைத் தான் விரைவில் அபிவிருத்தி அடைவதற்குத் துணைக்கருவிகளாகவும், தனக்குள் மறைந்து கிடக்கும் சக்திகளையும், திறமைகளையும் கண்டு பிடித்ததற்குச் சாதனங்களாவும் உபயோகித்துக் கொள்ளத் தொடங்கிறான்.
பிரபஞ்சத்தை ஆளும் தத்துவம் ஒழுங்கேயன்றிக் குழப்பமன்று; வாழ்க்கையின் உயர்நிலை நீதியே அன்று அநீதி அல்ல. உலகத்தில் ஆன்ம அரசாங்கத்தை ஏற்படுத்தி நடத்திவரும் சக்தி தருமமேயன்றி அதருமமன்று. இது இங்ஙனமிருப்பதால், பிரபஞ்சம் சரியாயிருக்கிறதென்று காண்பதற்கு மனிதன் தன்னைச் சரியாக்கிக் கொள்ள வேண்டும். தன்னைச் சரியாக்குங் காலையில், அவன் பொருள்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் தனது நினைப்புகளை எவ்வாறு மாற்றுகிறானோ, அவ்வாறே அப்பொருள்களும் மற்றவர்களும் தன்னிடத்தில் மாறுதலுறக் காண்பான்.
மனம் போல் வாழ்வு.
வ.உ.சிதம்பரனார்.
